கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அடுத்த சின்னசேலம் அருகே கனியாமூரில் அமைந்துள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை 17ஆம் தேதி ஸ்ரீமதி என்ற மாணவி மரணம் அடைந்ததை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி கட்டிடம் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி கட்டடம் மற்றும் பள்ளி வளாகத்தில் இருந்த வானங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பள்ளி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பள்ளி சீரமைக்கும் பணி நடைபெற்றது. அந்தப் பள்ளியின் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால் 145 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று திறக்கப்பட்டது. பள்ளியின் நுழைவாயிலில் தோரணங்கள் கட்டி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்கும் விதமாக பேனர் வைக்கப்பட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தற்பொழுது சற்று தனிந்ததால் இன்று முதல் 9 முதல் பத்தாம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது.