வங்கக்கடலில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. சரியாக, இன்று காலை 8.32 மணியளவில் இந்த கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS)தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் பூரி (கிழக்கு) மற்றும் புவனேஸ்வர் (கிழக்கு-தென்-கிழக்கு) நகரங்களில் முறையே 421 கிமீ மற்றும் 434 கிமீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல நகரங்களில் காலை 9:05 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டாக்காவில் இருந்து தென்மேற்கே 529 கி.மீ., தொலைவிலம், காக்ஸ் பஜார் நகரில் இருந்து தென்மேற்கே 340 கி.மீ., தொலைவிலும், சிட்டகாங் நகரில் இருந்து தென்மேற்கே 397 கி.மீ., தொலைவிலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
Earthquake of Magnitude:5.1, Occurred on 05-12-2022, 08:32:55 IST, Lat: 19.14 & Long: 89.79, Depth: 10 Km ,Location: Bay of Bengal, India for more information Download the BhooKamp App https://t.co/urXZwR1TPe @Dr_Mishra1966 @Indiametdept @ndmaindia @PMOIndia @Ravi_MoES pic.twitter.com/FoGypWN6u1
— National Center for Seismology (@NCS_Earthquake) December 5, 2022
குறிப்பாக, வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. கடலில் நிலநடுக்கம் உணரப்பட்ட அனைத்து பகுதிகளும் இந்தியாவுக்கு மிக அருகில் இருப்பவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நிலநடுக்கத்தால் பெரிய அளவில் ஏதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. கடலின் கரையோரப் பகுதிகளில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்துமா இல்லையா என்பது குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் இதுவரை எதுவும் கூறவில்லை.
டிசம்பர் மாதம் என்றாலே, இயற்கை சீற்றங்கள் அதிகமாக காணப்படுவதாக கூறப்படும் நிலையில், வங்கக்கடலில் இந்த நிலநடுக்கம் கரையோரம் இருக்கும் மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக சுனாமி குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றே தெரிகிறது.
மேலும் படிக்க | இரட்டை சகோதரிகளை மணந்த மகாராஷ்டிரா ‘வாலிபர்’; போலீஸார் வழக்குப் பதிவு!