சமீப காலங்களில் குழந்தைத் திருமணங்கள் நடப்பது குறைந்து வந்தாலும்கூட, கிராமப்புறங்களிலும், மிகவும் வறுமையில் வாடும் மக்களிடையேயும் இது பரவலாக உள்ளது. குழந்தைத் திருமணத் தடுப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கடுமையாக செயல்படுத்தி வந்தாலும், சில சமூகங்களில் இந்த நடைமுறை இன்னும் வழக்கத்தில் இருந்து வருகிறது. குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையை மீட்டுத் தருவது அரசின் கடமை மட்டுமில்லை, சமூகத்தில் இருக்கும் நமது அனைவரின் கடமையாகும்.
எனவே உங்கள் பகுதியில் குழந்தைத் திருமணம் நடைபெற்றால், எப்படி புகார் அளிப்பது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
குழந்தை திருமண புகார் எவ்வாறு செய்யலாம்:
- குழந்தை திருமண புகார்களை வாய்வழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ அளிக்கலாம். அதாவது தொலைபேசி அழைப்பு, கடிதம், தந்தி, மின்னஞ்சல், தொலைநகல் அல்லது புகார் அளிப்பவர் தன் கையால் எழுதிய கடிதத்தின் மூலமாக புகார் அளிக்கலாம்.
- குழந்தையின் திருமணத்திற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ குழந்தைத் திருமணச் சம்பவம் குறித்து தகவல் அறிந்தால் அல்லது உங்கள் பகுதியில் நடந்தால், குழந்தைகள் ஹெல்ப்லைன் நம்பர் 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம்.
- அருகில் உள்ள காவல் நிலையங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் போன்ற இடங்களில் நேரடியாக சென்று புகார் அளிக்கலாம்.