தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மருந்துகள் 6 மாத காலத்திற்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தடுப்பூசிகள் தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை.
தமிழகத்தில் கடந்த 6 மாத காலமாக கொரொனா பாதிப்பில் உயிரிழப்பு எனபது இல்லை. கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கம் என்ற அளவில் உள்ளது. நேற்று சுமார் 4 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு மட்டுமே கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்று கூறினார்.