சத்தியமங்கலம்L மாயாற்றின் கரையில் முதலை நடமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் பவானி ஆறு மற்றும் மாயாறு வழியாக அணைக்கு வந்து சேருகிறது. நீலகிரி மலைப்பகுதியில் உள்ள கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீர் அப்பகுதியில் உருவாகும் மாயாற்றில் பெருக்கெடுத்து சீகூர் வனப்பகுதி மற்றும் தெங்குமரஹாடா வனப்பகுதி வழியாக பயணித்து பவானிசாகர் அணைக்கு வந்தடைகிறது. தெங்குமரஹாடா வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றின் முதலைகள் அதிக அளவில் வசிக்கின்றன.
இந்தநிலையில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி உள்ள மாயாற்றின் கரையில் ஒரு முதலை படுத்திருப்பதை கண்டு நேற்று அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். முதலை ஆற்றின் கரையில் படுத்திருக்கும் காட்சி பின்னர் ஆட்களை கண்டவுடன் எழுந்து நீருக்குள் குதிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.