புளோரிடா,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீரா நோயால் சிகிச்சை பெற்று வந்த கணவனை மனைவி துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டய்டொனா பீச்சில் உள்ள மருத்துவமனையில் 77 வயதான கணவனை 76 வயதான மனைவி திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மருத்துவமனையில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், உடல்நலம் குன்றிய முதியவரும், அவரது மனைவியும் 3 வாரங்களுக்கு முன்பே இது குறித்து உரையாடல் நிகழ்த்தியுள்ளனர். உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்ததால் முதியவர் தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால் அவரால் முடியாத காரணத்தால் அவரது மனைவி துப்பாக்கியால் சுட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மூதாட்டியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.