‘பொன்னியின் செல்வன் 2’ படத்தால் தள்ளிப்போகும் ரஜினியின் ‘ஜெயிலர்’ ரிலீஸ்?

ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ‘ஜெயிலர்’ படம் வெளியாகலாம் என்று தகவல் பரவி வந்தநிலையில், தற்போது சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் மாத்திற்கு தள்ளிப்போயுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் கடைசியாக இயக்கிய ‘பீஸ்ட்’ படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும், கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியது. இதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்தே’ படத்திற்கும் இதே நிலைமைதான் இருந்தது. இதனால் இவர்கள் இணைந்துள்ள ‘ஜெயிலர்’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் திரைக்கதை அமைப்பதில் நீண்ட நாட்கள் கவனம் எடுத்துக்கொண்ட நெல்சன் திலீப்குமார், அண்மையில்தான் படப்பிடிப்பை துவங்கினார்.

இதற்கு நடிகர் ரஜினிகாந்த்தும் ஆதரவாக இருந்து சிறப்பான கதைக்களம் அமைக்க நெல்சனுக்கு சுதந்திரம் கொடுத்து இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ்ராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் இணைந்தனர். ரஜினிகாந்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.

image

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்த நேரத்திற்குள் முடியாமல், நீண்டுக் கொண்டே சென்று வருகிறது. இதனால் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தான் முடியும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 14-ம் தேதி படத்தை வெளியிடாமல் தவிர்க்க படக்குழு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.