வளர்ப்பு மகன் விவகாரம்: ஏ.சி.முத்தையா வழக்கு தள்ளுபடி!

மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்து தொழிலதிபர் ஏ.சி.முத்தையா சார்பில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டாக்டர் எம்.ஏ.எம் ராமசாமி செட்டியாரின் செட்டிநாடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான டாக்டர் ஏ.சி.முத்தையா கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த மறைந்த எம்.ஏ.எம் ராமசாமி செட்டியாரின் தந்தையும் தனது தந்தையும் சகோதரர்கள் என்றும் எம்.ஏ.எம்.ராமசாமி கடந்த 1996-ம் ஆண்டு எம்.ஏ.எம்.ஆர்.ஐயப்பன் என்பவரை வளர்ப்பு மகனாக தத்து எடுத்ததாகவும்,

ஆனால் நகரத்தார் சமூகத்தின் பாரம்பரிய கட்டுப்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களை மீறி ஐயப்பன் தத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐயப்பன் சட்ட விரோதமாக வளர்ப்பு மகன் அந்தஸ்தில் இருந்து கொண்டு தனது பதவியை துஷ்பிரோயகம் செய்து, எம்.ஏ.எம்.ராமசாமியை செட்டிநாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் எம்.ஏ.எம்.ராமசாமிக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை அபகரித்துக்கொண்டதாகவும், எம்.ஏ.எம்.ராமசாமி தனது உயிலை பதிவு செய்யும்போது தனக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை செட்டிநாடு அறக்கட்டளைக்கு எழுதி வைத்துள்ளதாக கூறியிருந்தார்.

எம்.ஏ.எம். ராமசாமி வாழ்ந்த காலகட்டத்தில் அவருக்கு துரோகம் செய்த ஐயப்பன், மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த போது அதற்கு அப்போதே தானும், டாக்டர் மீனா முத்தையா உள்ளிட்ட சிலரது சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் ஐயப்பனுக்கு மயிலாப்பூர் வட்டாட்சியர் வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

எனவே கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும், என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், ஐயப்பன் முறையாக தத்து எடுக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? என்பதை உயர் நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்றும், வாரிசு சான்றிதழ் என்பது வளர்ப்பு மகனாக தத்து எடுக்கப்பட்டுள்ள ஐயப்பனுக்கும், எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் உள்ள உறவு முறைக்காக வழங்கப்பட்டுள்ளது. அதை இருதரப்புமே தங்களுக்கான உரிமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எனவே ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளையின் சார்பில், ஏ.சி. முத்தையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது ஐயப்பன் சார்பில் மூத்த வழக்கறிஞர் எம்.எஸ். கிருஷ்ணன் ஆஜராகி, அறக்கட்டளை சார்பில் இந்த வழக்கை தொடர முடியாது என்றும் தத்தெடுப்பது தனிப்பட்ட உரிமை என்று வாதிட்டார். அதை மூன்றாவது நபர்கள் எதிர்த்து வழக்கு தொடர உரிமை இல்லை என்றும் தெரிவித்தார்.

1996க்கு பிறகு தற்போது பல ஆண்டுகள் கடந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வாதத்தை பதிவு செய்து கொண்டு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.