தமிழ்நாடு வானிலை: மீண்டும் கனமழை பெய்யப் போகுதாம்- வந்தது சூறாவளி அப்டேட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நீடிக்கிறது.

நாளைய தினம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 29, 30ஆம் தேதி

தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 31ஆம் தேதி

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி

தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்
கனமழை
பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 2ஆம் தேதி

தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

இன்று முதல் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 29ஆம் தேதி

தென்கிழக்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜனவரி 30ஆம் தேதி

இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜனவரி 31ஆம் தேதி

இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 – 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

பிப்ரவரி 1, 2ஆம் தேதி

ஜனவரி 31ஆம் தேதியை போன்ற வானிலை நிலவரம் தான் மீண்டும் தென்படும். அதேசமயம் சூறாவளி காற்று 40 – 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.