சென்னை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லியில் சந்தித்து இலங்கையில் 13-வது சட்டத்திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை நேற்று முன் தினம் இரவு அவசரமாக டெல்லி சென்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேற்று காலை அவரது இல்லத்தில் சந்தித்த அண்ணாமலை, தமிழக அரசியல் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம் தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
மேலும், சில முக்கிய தலைவர்களை சந்தித்த அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அண்ணாமலை சந்தித்து இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். அப்போது, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை எந்த மாற்றமுமில்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிலையில், பாஜக சார்பில் ஈரோடு இடைத்தேர்தல், பட்ஜெட் தொடர்பான ஆலோசனை இன்று சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற இருக்கிறது. இதில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.