டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ராஜினாமா – சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்தரும் விலகல்

புதுடெல்லி: ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, 9 மாதங்களாக சிறையில் இருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகிய இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர்.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி, இதுவரை 36 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 26-ம் தேதி டெல்லி துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியாவை சிபிஐ செய்தது. அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.

இந்த சூழலில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ஆட்சியிலும், கட்சியிலும் 2-ம் இடத்தில் அவர் இருந்தார். கல்வி,பொதுப்பணி, நிதி உட்பட 18 துறைகளின் பொறுப்பை கவனித்து வந்தார். அவர் கைது செய்யப்பட்டு, பதவி விலக நேரிட்டிருப்பது ஆம் ஆத்மி அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா: ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், பண மோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு மே 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ரூ.16.39 கோடி கறுப்பு பணத்தை பரிமாற்றம் செய்திருப்பதும், ஹவாலா மோசடிக்காக 54 போலி நிறுவனங்களை நடத்தியதும் அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.

இதன் காரணமாக, அவருக்கு சொந்தமான ரூ.4.81 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அவரது வீட்டில் இருந்து ரூ.2.82 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த 9 மாதங்களாக டெல்லி திகார்சிறையில் சத்யேந்தர் ஜெயின் உள்ளார். சிறையில் அவர் ஆடம்பரமாக வாழ்ந்து வருவது சிசிடிவி காட்சிகள் மூலம் சமீபத்தில் அம்பலமானது. இந்த சூழலில், சிறையில் உள்ள சத்யேந்தர் ஜெயினும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

“ஊழலுக்கு எதிரான கட்சி என்று கூறி வரும் ஆம் ஆத்மி மீது அடுத்தடுத்து ஊழல்கறை படிந்து வருவது, அக்கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது’’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

விசாரணைக்கு ஏற்க மறுப்பு: இதற்கிடையே, கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் மணிஷ்சிசோடியா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்ஹாஅமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. சிசோடியா தரப்பில் மூத்தவழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.

‘‘நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.