தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு கூடுதல் அபராதம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2018ல் தாக்கல் செய்த மனுவில், ‘அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் பெயர் பலகைகளை  தூய தமிழில் வைக்க வேண்டுமென்ற அரசாணையை முறையாக அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளருக்கு ஏற்கனவே ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசு செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘வணிக நிறுவனங்களில் 5:3:2  என்ற விகிதத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் பெயர் பலகை வைக்க அரசாணை உள்ளது. இதை பின்பற்றாதவர்களிடம் ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது. கடந்த 2018-2022 வரை 2.22 லட்சம் கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில் 6,074 கடைகள், அரசாணையை பின்பற்றாததற்காக ரூ.4.58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உணவக சட்டப்படி 349 உணவகங்களிடம் இருந்து ரூ.32,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முறையாக பின்பற்ற அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது’’ என்றார்.

மனுதாரர் வக்கீல் அழகுமணி, ‘‘ரூ.50 அபராதம் என்பது 1948ல் அப்போதைய நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டது. அபராத தொகையை தற்போதைய நிலைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். குறைந்த அளவான அபராதத் தொகையை செலுத்துவோர், பெயர் பலகையில் எந்த மாற்றமும் செய்வதில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் போதுமானதல்ல. தீவிரமான நடவடிக்கையும் தேவைப்படுகிறது. எனவே, அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து ஈடுபடுவோர் மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கையளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.