சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துறைத்தலைவர் பெண் மருத்துவர்களை தவறாக சித்தரித்து பேசி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது குறித்த புகாரின் அடிப்படையில், ‘டீன்’ மணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘விசாகா’ கமிட்டியை சேர்ந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், இரும்பாலையில், அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பணியாற்று பெண் உதவி பேராசிரியர்கள், தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அனுப்பியுள்ளனர். அந்த புகாரில் ‘மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் துறைத் தலைவர், பெண் மருத்துவர்களை தவறாக சித்தரிந்து பேசியதால் மன உளைச்சல் உள்ளாகியுள்ளத,’ எனத் தெரிவித்துள்ளனர்.
இதுசம்பந்தமான புகார் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீஸார் விசராணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின்படி, சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ‘டீன்’ மணி தலைமையில் ‘விசாகா’ கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் உள்ள எட்டு பேர் குழுவினர், அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர், பெண் மருத்துவர்களிடம் தவறாக சித்தரித்து பேசி, மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது குறித்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்த விசாரணை முடிவு அறிக்கை சென்னை, மருத்துவக்கல்வியியல் இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னர், மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.