அரக்கோணம் பகுதியை சேர்ந்த தந்தை ஒருவர் அவரின் தனது மூன்று மகள்களை காவல் பணியில் சேர்த்துள்ளார். மகளிர் தினமான இன்று அவரை போன் மூலம் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், கீழ் ஆவதனம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது மூன்று பெண்கள் – பிரீத்தி, வைஷ்ணவி மற்றும் நிரஞ்சனி ஆகியோரை காவலர் பணிக்கு தேர்வாவதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தார்.
தற்போது அவரது மூன்று மகள்களும் காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியில் உள்ளனர். வெங்கடேசனின் அர்ப்பணிப்பு முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில், “வெங்கடேசனின் அர்ப்பணிப்பு, மிக்க கடின உழைப்பினை பாராட்டும் விதமாக உலக மகளிர் தினமான இன்று (8.3.2023) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரை தொடர்புக் கொண்டு, அவரது மூன்று மகள்களும் காவல் பணியில் சேர்வதற்கு கடினமான பொருளாதார சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், விடாமுயற்சியுடன் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தமைக்காகவும், மகள்களை துணிச்சல் மிக்கவர்களாகவும், பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்களாகவும் வளர்த்தற்காக அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது, வெங்கடேசன் முதல்வருக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்’ என்று தமிழக அரசு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.