#BIG NEWS : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு – அரசு மருத்துவக்கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும்..!!

 ரூ. 22 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அரங்குக்கு அனிதாவின் பெயரை சூட்டுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த கூலித் தொழிலாளியின் மகள் அனிதா சிறுமியாக இருந்தபோதே அவரின் தாயார் இறந்துவிட்டார். தமிழ்வழிக் கல்வியில் பயின்று, அரியலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், ஒன்றிய அரசு, மருத்துவ சேர்க்கையினை 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணுக்கு பதிலாக, நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என்ற அறிவிப்பினால் மனமுடைந்தார்.

ஏழை கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்குத் தேவையான விலையுயர்ந்த நீட் தேர்வு பயிற்சிகளை பெறுவது சாத்தியமில்லை என்பதையும், 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை தேர்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே, தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற முடியும் என்பதையும் உணர்ந்து, நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, தீர்ப்பு வெளியான ஒன்பது நாட்களில் அனிதா தனது இன்னுயிரை 2017 செப்டம்பர் 1-ம் நாள் மாய்த்துக் கொண்டார்.

இவரின் மரணத்திற்கு பிறகு தான் நீட் தேர்வு எதிர்ப்புக்கு அனைவரும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் மாணவி அனிதாவின் பெயரை புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கு சூட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.