கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் ஆயிர கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கல்லூரியில் கடந்த எட்டாம் தேதி மகளிர் தினத்தன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்சிக்கு கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களும் வந்து கலந்துள்ளனர். அப்போது முன்னாள் மாணவர்கள் சிலர் விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இதனால், கல்லூரி பேராசிரியர் ஒருவர் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் கல்லூரியை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே உள்ள கடைக்கு வந்த பேராசிரியரை சுற்றி வளைத்து சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.