அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்ற ஜூன் மாதம் செல்லும் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

புதுடெல்லி: அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று வரும் ஜூன் 3-வது வாரத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜூன் 21 முதல் 25-ம் தேதி வரை பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். பிரதமரின் பயண தேதி விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும்.

அமெரிக்க பயணத்தின்போது அந்த நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார். அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அவருக்கு இரவு விருந்து அளிப்பார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படும்.

வரும் மே மாதம் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின்போது பிரதமர் மோடியும் அதிபர் ஜோ பைடனும் சந்திக்க உள்ளனர்.

கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றது. இதன்படி வரும் செப்டம்பரில் இந்தியாவில் ஜி -20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அப்போதும் அதிபர் பைடனும் பிரதமர் மோடியும் சந்தித்துப் பேச உள்ளனர்.

தற்போது ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில் ரஷ்யா, உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ராஜ்ஜியரீதியிலான நடவடிக் கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், வரும் மாதங்களில் இருநாட்டு தலைவர்களும் உக்ரைன் போர் குறித்து விவாதிப்பார்கள். இவ்வாறு வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.