2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றாது – முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்

மும்பை,

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்த மாதம் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்பட்டு வருகிறார். அவருக்கு தற்போது 41 வயதாகிறது. அதனால் அவர் இந்த சீசனுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி ஏற்கனவே அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக இது இருக்கும் என்பதால் அவரை வெற்றி கோப்பையுடன் வழி அனுப்ப சிஎஸ்கே வீரர்கள் மிக கடுமையாக போராடுவர். இந்நிலையில், இந்த வருட ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வெல்லும் என நான் நினைக்கவில்லை என இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வெல்லும் என நான் நினைக்கவில்லை. இந்த தொடரில் என்னுடைய ஆதரவு ராஜஸ்தான் அணிக்கு தான், ஏனெனில் சஞ்சு சாம்சனுக்காக. ஆனால், சம்பியன் பட்டத்தை இதுவரை கைப்பற்றாத அணி வென்றால் மகிழ்ச்சியாக இருக்கும்.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கைப்பற்றினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். விராட் கோலி இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்துள்ளார்…ஐபிஎல் கோப்பையை பெங்களூரு கைப்பற்றினால் அது நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.