அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் வழக்குகளில் நாளை தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு நாளை தீர்ப்பளிக்க உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கியது, பொது செயலாளர் பதவி உருவாக்கம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி கே.குமரேஷ் பாபு உத்தரவிட்டிருந்தார்.
பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து வழக்கு – ஓபிஎஸ் தரப்பு வாதங்கள்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, அவர்கள் மூவருடன் சேர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது என்றும், பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி எடுத்துள்ள முடிவுகள் என்பது கட்சி நிறுவனரின் நோக்கத்துக்கு விரோதமானது என்றும் வாதிடப்பட்டது.
தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள் தான் என்றும், தங்களை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் தொடர்பாக ஜூலை 11 பொது குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாத நிலையில், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
image
பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெறுவதற்காக முக்கிய பதவி வகித்த தன்னை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என குற்றம்சாட்டப்பட்டது. பொது செயலாளர் தேர்தல் நடத்துவது என்பது ஒற்றை தலைமையை உருவாக்கும் நோக்கம் அல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்றும் குற்றம்சாட்டபட்டது.
அதிமுக தரப்பு கொடுத்த பதில்கள்
ஓபிஎஸ் தரப்பினர் வைத்த வாதங்களுக்கு பதிலளித்த அதிமுக தரப்பு, ஜூன் 23-ல் கட்சி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே, ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாகவும், கட்சியினரின் குரலாக பொது செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை என்றும், கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும் வாதிடப்பட்டது.
ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, அவரது சகோதரர் ராஜா, கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோரை நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை என்றும், கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது என்றும் அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நாளை தீர்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் நீதிபதி கே.குமரேஷ்பாபு நாளை (மார்ச் 28) தீர்ப்பை அறிவிக்க உள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.