மன்னிப்பு கோரிய ராணுவ அதிகாரி! முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம்!

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் பா.ஜ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.,வை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் என்பவர், தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.  ராணுவத்தில் பணியாற்றிய தங்களை போன்றவர்களுக்கு வெடிகுண்டு வைக்கத் தெரியும். துப்பாக்கி சுடுவதிலும், சண்டை போடுவதிலும் நாங்கள் கெட்டிக்காரர்கள். இதை எல்லாம் செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு அவர் மிரட்டல் விடுத்து பேசினார்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கர்னல் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் பாண்டியன் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார். 

மனுதாரர் சார்பில்,  இதுபோல மிரட்டல் விடுக்கும் விதமாக இனி பேச மாட்டேன் என்று மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி,  இனி இதுபோல பேச மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாண்டியன், இனி இதுபோல பேச மாட்டேன் எனறு நிபந்தனையற்ற மன்னிப்பு  கேட்டார்.  இதையடுத்து ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து திருவல்லிகேணி போலீசில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.