தமிழக குழந்தையை மீட்க அமெரிக்காவில் கார்த்திகேய சிவசேனாபதி நேரில் ஆய்வு!

பெற்றோரை இழந்த பின் அண்டை வீட்டாரின் கட்டுப்பாட்டில் 2 வயது தமிழ்க் குழந்தை இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் வசிக்கும் அக்குழந்தையின் குடும்ப உறவினர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தை அனுகி குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வர உதவி கோரியுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் உடனடியாக அக்குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்கள். அதைத் தொடர்ந்து குழந்தையின் குடும்ப உறவினர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அயலகத் தமிழர் நல வாரியம் செய்து வருகிறது,

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் தெற்கு பகுதியில் டென்னசி மாநிலத்தில் உள்ள மெல்பெசட் மாநகரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படியும் மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனைப்படியும் அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அட்லாண்டா இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ராஜு கந்தசாமி, மினி நாயர், அயலகத் தமிழர் நல வாரியத்தின் அமெரிக்க நாட்டு உறுப்பினர் கால்டுவெல் வேள்நம்பி, குழந்தையின் சிற்றன்னை, பாட்டி, உள்ளுர் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் டல்லாஸ் நகரத்திலிருந்து சக்திவேல், சார்லோட் ரோகிணி, ராலே பகுதி வட கரோலினா REACTION (Response Emergency Access&Care To Indian Overeas Network Team Inc) லாவண்யா, மிட் சவுத் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த வாசுதேவன், கல்யாண், திருமகள் தியாகராஜன், ரேகா பிள்ளை, கேமெலியோ ஜோன்ஸ், பிரியா நாகராஜ், ராஜி வேல்ராஜன், கே.பி ராமநாதன், விக்னேஸ்வரன் சிவசுப்ரமணியம், சூரியன் பொன்னுசாமி, செந்தில் வி சந்திரன், சங்கர் மஹாலிங்கம் சக்திவேல் ராம் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வுக் கூட்டம் சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றது. அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக நியூயார்க் வழக்கறிஞர்கள் நிலா மற்றும் பாலாஜி ஆகியோருடனும் இப்பிரச்சினையை சட்டப்படி எப்படி அணுகுவது என்று ஆலோசனை பெறப்பட்டது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து அக்குழந்தையை மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரத் தேவையான சட்ட உதவி, பொருளாதார உதவி செய்வோம் என உறுதியளிக்கப்பட்டது.

தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தலைவர் பாலா சாமிநாதன் மற்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாகவும், அயலகத் தமிழர் நல வாரியம் சார்பாகவும் வாரியத்தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி நன்றி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.