ஓசூர் அருகே மாந்தோப்பில் 5 யானைகள் முகாம்; பொதுமக்கள் பீதி

ஓசூர்: ஓசூர் அருகே கிராம பகுதியில் உள்ள மாந்தோப்பில் 5 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட யானைகள் அவ்வப்போது வருவதும், மீண்டும் வனத்துறையினரால் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டப்படுவது என வழக்கமாக உள்ளது. கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா வனப்பகுதியில் இருந்து மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி வழியாக, ஓசூர் அருகேயுள்ள சூதாளம் கிராம பகுதிக்கு, 5 யானைகள் நேற்று வந்தன. இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் முகாமிட்டுள்ளன.

இந்த பகுதியில் அச்செட்டிப்பள்ளி, மத்திகிரி, இடையநல்லூர், சூதாளம் என ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த யானைகள் தோட்டங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த 20பேர் கொண்ட வனக்குழுவினர், இந்த யானைகளை  இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன், மாவட்ட கால்நடை பண்ணைக்குள் 5 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகளை வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டு, கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அவ்வப்போது கிராம பகுதிகளில் வந்து தஞ்சம் அடையும் யானைகளால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.