சேலம் வசிஷ்டா நதியின் குறுக்கே புதிய மேம்பாலம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்

சென்னை: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் வசிஷ்டா நதியின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டித்தரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தை சேர்ந்த ஶ்ரீராம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “பெத்தநாயக்கன்பாளையம் சின்னமசமுத்திரம் கிராமத்தை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் வசிஷ்டா நதியின் குறுக்கே மேம்பாலம் அமைத்துதர வேண்டும். இதுதொடர்பாக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த 2021ம் ஆண்டு தமிழக முதல்வர் மேம்பாலம் கட்டித்தரப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்.

ஆனால், அரசு அறிவித்தபடி பாலம் இன்னும் கட்டித்தரப்படவில்லை. இந்த மேம்பாலம் இல்லாத காரணத்தால், அவசர காலங்களில் பல கிலோமீட்டர் சுற்றி மருத்துவமனை, பேருந்து நிலையங்களுக்கு பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, முதல்வர் அறிவித்தபடி உடனடியாக மேம்பாலம் கட்டித்தர உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பீளிடர் முத்துக்குமார் ஆஜராகி, நெடுஞ்சாலைத் துறை பொறியாளரின் நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், சின்னமசமுத்திரம் கிராமம் மட்டும் பயன் பெறும் வகையில் பாலம் அமைக்க முடியாது. பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள 4 கிராம மக்கள் பயன் பெறும் வகையில் வசிஷ்டா நதியின் குறுக்கே பாலம் அமைக்க 6 கோடியே 74 லட்சம் ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வசிஷ்டா நதியின் குறுக்கே புதிய மேம்பாலம் அமைத்து தரப்படும் என்ற அரசின் உத்திரவாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.