தென்னை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட எதிர்பார்ப்பு

2030 ஆம் ஆண்டளவில், தென்னை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் 51ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தென்னைச் செய்கையின் புதிய நடைமுறைகள் குறித்து விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கும் விழிப்புணர்வு நிகழ்வு விவசாய சேவைகள் பயிற்சி நிலையத்தில் இன்று (30) நடைபெற்றது. இந்நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது தென்னை சார்ந்த உற்பத்திகள் மூலம் வருமானமாக 900 மில்லியன் ரூபா கிடைக்கிறது என்றும்; இந்த வருமானத்தை ஒரு பில்லியனாக அதிகரிக்க இரண்டு கட்டங்களாக வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கமைய கிராமிய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் கீழ் தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு குறிப்பிடத்தக்க பொறுப்பு இருப்பதாகவும், இவ்வருடம் 12 இலட்சம் தென்னை மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தென்னை பயிர்ச்செய்கை சபையிடம் தற்போது 39 தென்னை கன்றுகள் உள்ளதாகவும், அந்த கன்றுகளை விரைவாக பகிர்ந்தளித்து தென்னை உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.