புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடந்த 2019-ம் ஆண்டு அவரது பெரியப்பாவும், தாத்தாவும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் படி, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பில், “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கும் ஆயுள் தண்டனை ,மற்றும் இரண்டரை லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அத்துடன், அந்த சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை பணத்தை சிறுமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், அரசு சார்பில் சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடபட்டுள்ளது.