அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பீட்சா வாங்கிய ரசீது ஒன்று 12 வயது சிறுவனை கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த பீட்சா ரசீது
விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி பகுதியில் நடந்த கொலை சம்பவத்தில், பொலிசாருக்கு கிடைத்த பீட்சா ரசீது ஒன்று எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவன் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கில் அந்த சிறுவன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மார்ச் 15ம் திகதி பிராண்டன் ஃபெல்டன் என்ற 34 வயது நபர் படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த நபருடன் அந்த சிறுவன் நெருக்கமாக பழகி வந்துள்ளதால், ஓய்வு வேளைகளில் இருவரும் ஒன்றாக வீடியோ கேம்களை விளையாடுவதும் வழக்கம்.
இந்த நிலையில், பிராண்டன் ஃபெல்டன் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், சம்பவயிடத்தில் இருந்து பீட்சா வாங்கிய ரசீது ஒன்றை கைப்பற்றியிருந்தனர்.
அதில், தொடர்புடைய அலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அலைபேசி இலக்கமானது பிராண்டன் ஃபெல்டனின் நண்பனான 12 வயது சிறுவனுக்கு சொந்தமானது.
இதனையடுத்து பொலிசார் சிறுவனிடம் விசாரணை முன்னெடுத்தனர். ஆனால் முரணான தகவல்களையே அளித்து வந்துள்ளான்.
சம்பவம் நடந்த அன்று தாம் பிராண்டன் ஃபெல்டன் வீட்டுக்கு செல்லவில்லை எனவும், பீட்சா வாங்கவில்லை எனவும் சாதித்துள்ளான்.
இருப்பினும், பொலிசாரின் தொடர் விசாரணைக்கு பிறகு, கொலை நடந்த போது தாம் பிராண்டன் ஃபெல்டன் வீட்டில் இருந்ததாகவும், அவரிடம் இருந்த துப்பாக்கிகளை திருடுவதற்காக பிராண்டன் ஃபெல்டனின் நண்பரே கொலை செய்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.
தாயாரிடம் உண்மையை கூறிய சிறுவன்
இதனிடையே, பொலிசாரின் விசாரணை பிராண்டன் ஃபெல்டனின் நண்பர் தொடர்பில் சென்றது.
ஆனால் மார்ச் 20ம் திகதி, இந்த விவகாரம் தொடர்பில் அந்த 12 வயது சிறுவன் தமது தாயாரிடம் உண்மையை கூறியுள்ளான்.
மட்டுமின்றி, பொலிஸ் விசாரணையில் பொய் கூறியதாகவும் தெரிவித்துள்ளான்.
இதை சிறுவனின் தாயார் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தமது மகனும் நண்பர்களும் பிராண்டன் ஃபெல்டனிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை வாங்க முயன்றதாகவும், 12 வயது சிறுவர்களுக்கு துப்பாக்கியை விற்க முடியாது என அவர் மறுத்ததாகவும் பொலிசரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே சிறுவன் கைதாகியுள்ளான். மேலும், விஸ்கான்சின் மாகாணத்தை பொறுத்தமட்டில் 10 வயதுக்கு மேல் எவர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கினாலும், அவர்களுக்கும் வயதானவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையே விதிக்கப்படும்.