சொன்னபடி நாளை ருத்ரன் ரிலீஸ்..!! தடை நீங்கியது எப்படி ?

மிரட்டலான கதைக்களத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. பிரபல தயாரிப்பாளர் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை ரெவன்சா குளோபல் வென்சர்ஸ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 12 கோடியே 25 லட்சம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே இந்த டப்பிங் உரிமைக்கு கூடுதலாக 4 கோடியே 50 லட்சம் கேட்ட தயாரிப்பு நிறுவனம், திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்ததது.

இந்நிலையில் திட்டமிட்ட படத்தை வெளியிட அனுமதித்தால் தங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 24-ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இந்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இடைக்கால தடையால் தங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவன ஃபைவ்ஸ்டார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (ஏப். 13) விசாரணைக்கு வந்த போது, தடையை நீக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்க கூடாது எனவும் பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், ருத்ரன் படத்தை திரையரங்கம், ஓடிடி, சாட்டிலைட் ஆகியவற்றில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உத்தரவிட்டார். இதன் மூலம் திட்டமிட்டபடி ருத்ரன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.