என்னது… 3 டிகிரி வெயில் ஏறப் போகுதா? பயப்படாதீங்க… லைட்டா மழை இருக்குதாம்… தமிழகத்திற்கு வானிலை அறிவிப்பு!

தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இன்றைய தினம் (ஏப்ரல் 23) மட்டும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியே எங்கேயும் செல்ல முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். காலையில் சிக்கன், மட்டன் வாங்க வெளியில் சென்றதுடன் சரி.

பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

வானிலை மையம்

அதன்பிறகு யாரும் வெளியே தலைகாட்டியதாக தெரியவில்லை. இப்படி உள்ளுக்குள் தகித்து கொண்டிருக்க ஆறுதல் அளிக்கும் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அடுத்த 4 நாட்களில் லேசான மழை பெய்யக்கூடுமாம். வெயில் காலத்தில் மழை வந்தால் சூட்டை கிளப்பிவிடும். அப்புறம் அதை சரிசெய்ய ஏதாவது செய்ய வேண்டிய சூழல் வரும்.

கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று

இனி விஷயத்திற்கு வருவோம். சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால்,

ஏப்ரல் 23 –
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 24 முதல் 26 வரை –
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 27 –
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் –
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 – 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 – 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை –
அப்படி எதுவும் இல்லை.

அதிகப்படியான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது, நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பாதிப்பு உள்ள நபர்களுக்கு வெப்ப அழுத்தம் காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும். எனவே உரிய முன்னேற்பாடுகளுடன் இருப்பது நல்லது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.