கிராம சபை கூட்டங்களில் ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவு

சென்னை: கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு எஸ்எம்சி குழுவின் தீர்மானங்களை எடுத்துரைக்க வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல், பள்ளி வளர்ச்சி, உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு, இடைநிற்றல் குறித்து மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றை அனைத்து ஊராட்சிகளிலும் இன்று (மே 1) நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதன்மூலம் கிராம பஞ்சாயத்தும், மக்களும் தங்கள் பள்ளி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும்.

இதுதவிர பள்ளி அமைந்துள்ள கிராமங்களில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வை எழுதிப் பயனடைய கிராம பஞ்சாயத்துக் கல்விக் குழு மூலம் அறிவுறுத்த வேண்டும். மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மேல்நிலைப் பள்ளிகளில் ‘உயர்கல்வி வழிகாட்டி மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலையும் கிராம சபை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.