ஆர்ப்பாட்டம்..கைது! பரபரப்புக்கு இடையே தொடங்கிய பட்டினப் பிரவேசம் -தருமபுர ஆதீனத்தை சுமந்த பக்தர்கள்

மயிலாடுதுறை: முற்போக்கு இயக்கங்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தருமபுர ஆதீன பட்டின பிரவேச இரவு 10 மணிக்கு தொடங்கி இருக்கிறது. பல்லக்கில் ஏறிய தருமபுர ஆதீனத்தை பக்தர்கள் சுமந்து வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் இந்த ஆதீனத்திற்கு உட்பட்டதாகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

11 நாட்கள் கொண்டாடப்படும் இந்த குருபூஜை விழா கடந்த மே 31 ஆம் தேதி தொடங்கியது. இதில் தருமபுர ஆதீனத்தை அமைத்த ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழாவும் பட்டினப் பிரவேசமும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். விழாவின் ஒரு பகுதியான திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை நடந்து முடிந்து இருக்கின்றன.

அதை தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு குருமகா சன்னிதானங்களில் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். இந்த நிலையில் திருவிழாவின் 11 ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பட்டினப் பிரவேச நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு தொடங்கியது. இதில் கலந்துகொள்ள மதுரை ஆதீனம் உட்பட பல்வேறு ஆதீனங்கள் தருமபுரத்தில் வருகை தந்து உள்ளனர்.

பட்டினப் பிரவேசம் என்றால் பல்லக்கில் தருமபுர ஆதீனத்தை அமரவைத்து பக்தர்கள் அந்த பல்லக்கத்தை தூக்கிச் சென்று 4 மாட வீதிகளிலும் வலம் வருவார்கள். அந்த வகையில் இன்று இரவு 10 மணியளவில் பக்தர்கள் புடைசூழ பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தருமபுரத்தில் தொடங்கியது.

பல்லக்கில் ஏறிய தருமபுர ஆதீனத்தை பக்தர்கள் சுமந்து 4 மாட வீதிகளில் பவனி வருகிறார்கள். நாளை அதிகாலை 4 மணி வரை பல்லக்கில் சுமந்து செல்லும் பக்தர்கள் மீண்டும் தருமபுர ஆதீன மடத்திற்கு சென்றடைவர்கள். இந்த நிகழ்வு பாரம்பரியாக நடத்தப்படுவதாக சொல்லப்படும் நிலையில், மனிதரை மனிதரே சுமப்பதற்கு முற்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு இந்த திருவிழா நடைபெறும்போதும் முற்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கோட்டாட்சியராக இருந்த பாலாஜி தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்துக்கு தடைவிதித்தார். இதனால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினரும், பிற மடங்களின் ஆதீனங்களும், பக்தர்களும் அரசியல் கட்சிகளும் தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்த வலியுறுத்தினர்.

பல்வேறு ஆதீனங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பட்டினப் பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கை விடுத்தார்கள். இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் கோட்டாட்சியர் பட்டினப் பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்குவதாக அறிவித்ததை அடுத்து அந்த நிகழ்ச்சி நடைபெறது.

இந்த ஆண்டும் இந்த பட்டினப் பிரவேசத்துக்கு எதிராக முற்போக்கு அமைப்புகள் குரல் கொடுத்தன. இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் மயிலாடுதுறை டிஎஸ்பியை நேற்று சந்தித்து அனுமதி கோரினர். ஆனால், போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் இன்று மாலை தடையை மீறி பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ் மண் தன்னுரிமை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று பட்டினப் பிரவேசம் நடைபெற்றது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.