தக்காளியை தொடர்ந்து உயரும் காய்கறிகளின் விலை… எப்போது தான் குறையும்?

நாடு முழுவதும் காய்கறிகளின் விலை  வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளன. ஜூன் 12-ம் தேதி கிலோ 20 ரூபாயாக இருந்த தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து ஒரு மாதத்திற்குள் 8 மடங்கு அதிகரித்து 150 ரூபாயை கடந்துள்ளது.

வழக்கமாக தக்காளி, வெங்காயம், பீன்ஸ் போன்ற காய்கறிகள் விலை நிலையில்லாமல் இருக்கும். ஆனால், இப்போது தக்காளியைத் தொடர்ந்து இஞ்சி, பூண்டு உள்ளிட்ட எல்லா காய்கறிகளின் விலையும் நிலையில்லாமல் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருளான காய்கறி விலை உயர்வு சாமானிய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

காய்கறி சந்தை

தமிழகத்தில் காய்கறி உற்பத்தி குறைந்தால் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது அம்மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை பொழிவால் காய்கறி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விலை உயர்வும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பெரிய காய்கறி சந்தைகளான, மதுரை மாட்டுத்தாவணி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம்,  திருநெல்வேலி நயினார்குளம், சேலம் தலைவாசல், நாகர்கோவில் வடசேரி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதம் வரை தினசரி, 250 லாரிகளில் வந்திறங்கிய இஞ்சி, தற்போது, 100 லாரிகளாகக் குறைந்துவிட்டது. இதனால் காய்கறி பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

இந்த காய்கறிகளின் விலை உயர்வால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை, மக்களும் பாதிக்கபடுகின்றனர் என்பதால்,  அரசே காய்கறிகளை கொள்முதல் செய்து விலையை நிர்ணயித்து, மக்களுக்கு நேரடியாக விற்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி 140 ரூபாய்க்கும், வெங்காயம் 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தநிலையில் தற்போது, சற்று விலை குறைந்து விற்பனை ஆனது.

கோயம்பேடு மார்க்கெட்

பல இடங்களில் தக்காளி திருட்டு அதிகரித்து வருவதால் வியாபாரிகள் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

தெலங்கானா, கர்நாடக மாநிலத்தில் தக்காளி திருட்டு அதிகரித்த நிலையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் தோட்டத்தைச் சுற்றிலும் முள்வேலி அமைத்தும், கோணிப்பை விரிப்பை மறைவாக கட்டியும் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயங்களில் போலீசார் இரவு நேர ரோந்து பணியை முடுக்கி விடவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்து கின்றனர்.

கடும் விலை சரிவு, வெப்பநிலை, நஷ்டத்தை சந்திக்கும் சூழல் என பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட விவசாயிகள், தக்காளி சாகுபடியை செய்யாமல் விட்டதே இந்த நிலைக்கு காரணம் என்று கூறுகின்றனர்.

மேலும், கிருஷ்ணகிரி, ஒசூர் போன்ற இடங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் இன்னும் 2 வாரத்தில் தக்காளி விலை ஓரளவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.