ஐசிசி ஒருநாள் தரவரிசை; மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி…!!

துபாய்,

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்தன. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் நேற்று வரை தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. அந்த அணி உலகக்கோப்பை தொடருக்கு முன் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேற இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்ற வேண்டும்.

2-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததன் மூலம் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் நம்பர் 1 இடத்தில் நீடிக்க ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான தொடரில் அந்த அணிக்கு சாதகமான சில அம்சங்கள் நடைபெற வேண்டும். ஏனெனில் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு வேறு ஆட்டங்கள் இல்லை.

தற்போது தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற கிடைத்த பொன்னான வாய்ப்பை ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்காளதேசத்துக்கு எதிரான தோல்வி மூலம் கெடுத்து விட்டது. வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றினால் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நம்பர் 1 அணியாக வலம் வரும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.