பெங்களூரு குண்டுவெடிப்பு | சந்தேக நபரின் சிசிடிவி காட்சி வெளியீடு; 4 பேரிடம் விசாரணை

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று (மார்ச் 1) ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் ஃபரூக் ஹூசேன் (26), திவிபான்சூ (25) ஆகிய இருவர் உட்பட 7 வாடிக்கையாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் 2 பேர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் என‌ தெரியவந்துள்ளது. மொத்தம் 10 பேர் காயமடைந்ததாக இன்றைய (சனிக்கிழமை) தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஒயிட் ஃபீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இன்று காலை முதல் தேசிய பாதுகாப்புப் படையினர் (NSG) நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சிசிடிவி காட்சி: இதற்கிடையில் ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டை வைத்தவர் என சந்தேகிக்கப்படும் நபரின் நடமாட்டம் அடங்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தொப்பி, கண்ணாடி, பேன்ட் சட்டை என நேர்த்தியாக ஆடை அணிந்து கையில் பையுடன் அந்த நபர் வேகமாக நடந்து செல்லும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. உணவகத்துக்குள் உள்ள சிசிடிவி காட்சியில் அதே நபர் கைப்பையை அங்கே வைத்துவிட்டு வெளியேறுவதும் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது. அந்த நபர் உணவகத்தில் பையை வைத்துவிட்டுச் சென்ற சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால் அவரைக் கண்டறிய தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடும் பணி நடந்த நிலையில் அந்த நபரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அந்த நபர் உடுப்பியில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் உடுப்பி, மங்களூரு பகுதிகளுக்கும் தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர்.

உயர்மட்டக் குழு ஆலோசனை: பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காவல் உயர் அதிகாரிகள், என்ஐஏ அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று நண்பகல் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தச் சம்பவத்தை யாரும் அரசியாலக்க வேண்டாம் என்று முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.

பரப்பனஅக்ரஹார சிறையில் விசாரணை: விசாரணைகள், ஆய்வுகள், ஆலோசனைகள் ஒருபுறம் இருக்க இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள ஷரீக் உள்ளிட்ட 4 பேரிடம் இன்று காலை முதல் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் 4 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற ஆட்டோ குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைதானவர்களாவர். மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷரீக், அல்-கொய்தா தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ரகசியமாக இயங்கிவந்த ‘பேஸ் மூவ்மென்ட்’ என்ற அமைப்பில் உறுப்பினராக இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த குண்டு வெடிப்பு நடந்ததுபோலவே நேற்றைய ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளதால் அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.