கொல்கத்தா: “சந்தேஷ்காலியில் நடந்த அனைத்தும் வெட்கக் கேடானவை. சந்தேஷ்காலி புயல் மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளையும் சென்றடையும்” என்று மேற்கு வங்கத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கி வைத்தார். அங்குள்ள ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரையில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சந்தேஷ்காலி அமைந்துள்ள வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தின் பராசந்தில் நடந்த பொதுக்கூட்டப் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது சந்தேஷ்காலி விவகாத்தை எழுப்பிய பிரதமர், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்வதாக குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி மேலும் பேசியது: “சந்தேஷ்காலியில் நடந்தவை அனைத்தும் வெட்கக் கேடானவை. இந்தச் சம்பவங்களுக்கு காரணமான நபரை திரிணமூல் காங்கிரஸ் அரசு பாதுகாக்க முயற்சிக்கிறது. என்றாலும் அந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மேற்கு வங்க அரசு பின்னடைவைச் சந்தித்துள்ளது. சந்தேஷ்காலி புயல் மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளுக்கும் பரவும்.
என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்பதால் இண்டியா கூட்டணி தலைவர்கள் மதி இழந்தவர்களாகி வருகின்றனர். அதனால் அவர்கள் மோடியை திட்ட ஆரம்பித்துள்ளனர். இண்டியா கூட்டணியில் உள்ள ஊழல்வாதித் தலைவர்கள் எனது குடும்பம் பற்றி கேட்கின்றனர். எனக்கு குடும்பம் இல்லாததால் நான் குடும்ப வாதத்துக்கு எதிரானவன் என்று கூறுகின்றனர். எனது குடும்பம் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள விரும்பினால், அதற்கு அவர்கள் இங்கே வர வேண்டும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் பெண்கள் அனைவரும் மோடியின் குடும்பமே.
மோடி துன்பத்தினால் அவதியுறும்போது அத்துன்பத்தில் இருந்து பெண்கள்தான் என்னைப் பாதுகாக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் எனக்கு துர்கா மாதாக்கள். இன்று நாட்டின் ஒவ்வொருவரும் அவர்களை மோடியின் குடும்பம் என்று அழைக்கின்றனர்” என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, கடந்த வாரம் மேற்கு வங்கத்தின் ஹுக்ளி மாவட்டம் ஆரம்பக் மற்றும் நாடியா மாவட்டம், கிருஷ்ணாநகரில் நடந்த இரண்டு பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “சந்தேஷ்காலியில் உள்ள சகோதரிகளுக்கு என்ன நடந்தது என்று இந்த நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் கொந்தளிப்பில் உள்ளது. சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார். மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் மம்தாவின் கட்சி தோல்வியடைவதை மக்கள் உறுதி செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னணி என்ன? – மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் சந்தேஷ்காலி தீவுப் பகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான். இவர் அங்குள்ள பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், அவர்களின் நிலங்களை அபகரித்ததாகவும் குற்றம்சாட்டினர். ஹாஜகான் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சந்தேஷ்காலி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். ஷாஜகான் கைது செய்யப்படாததற்கு, கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க அரசை கண்டித்ததுடன் அவரை கைது செய்ய கெடு விதித்தது. இதையடுத்து 24 மணி நேரத்துக்குள் ஷாஜகானை மேற்கு வங்க போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான சமீபத்திய அப்டேட்: ஷாஜகான் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: மேற்குவங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு