அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு… ரஷிய ராணுவத்தில் வேலையில் சேர்ந்த இந்தியர் பலி

மாஸ்கோ,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து, நீடித்து வருகிறது. இந்த நிலையில், ரஷிய ராணுவத்தில் இந்தியர்கள் பணியாற்றுவதும், முறையான பயிற்சி இல்லாமல் பலர் சிக்கி தவித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

இதில், முகமது அப்சான் என்ற ஐதராபாத் நகரை சேர்ந்த இளைஞரும் ஒருவர். வேலைக்காக சென்ற அவர், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உயிரிழந்து உள்ளார்.

அவருடைய மறைவை இந்திய தூதரகம் இன்று உறுதி செய்துள்ளது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் ரஷிய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்து உள்ளது.

எனினும், அவருடைய மரணத்திற்கான காரணம் அல்லது ரஷியாவில் என்ன வேலையில் ஈடுபட்டார் போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ரஷியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசை காட்டி வேலைக்கு ஆள் எடுக்கப்பட்டது. இதில், தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் இருந்து பலர் சென்றனர். ஆனால், பின்னர் அவர்கள் போரில் கட்டாயத்தின்பேரில் ஈடுபடுத்தப்பட்டனர் என தகவல் தெரிவிக்கிறது.

கடந்த பிப்ரவரி 29-ந்தேதி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தியொன்றில், ரஷியாவில் சிக்கி கொண்ட 20 இந்தியர்கள், இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அவர்களை சொந்த நாட்டுக்கு கொண்டு வரவேண்டிய பணிகளை சிறந்த முறையில் செய்து வருகிறோம் என தெரிவித்தது.

காவல் பணியில் அதிக சம்பளம் என வாக்குறுதி கொடுத்து துபாயை அடிப்படையாக கொண்ட பைசல் கான் என்பவர் உதவியுடன் பலர் ரஷியாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக பைசல் கான், தலா ரூ.3 லட்சம் பெற்றிருக்கிறார். இதன்பின்பு சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கி விட்டு அவர்கள் போரில் தள்ளப்பட்டனர்.

இந்தியர்க்ளுக்கு ஆயுதங்களை கையாளும் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டன. பின்பு, உக்ரைனின் கார்கிவ், டொனெட்ஸ்க் மற்றும் மரியுபோல் போன்ற நகரங்களை சுற்றி பணியமர்த்தப்பட்டனர் என தெரிய வருகிறது. அவர்கள் ரஷிய ராணுவத்திற்காக வேலை செய்கின்றனரா? அல்லது வாக்னர் என்ற கூலிப்படை அமைப்புக்காக பணியாற்றுகிறார்களா? என்பதும் தெரிய வரவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.