கோலி முதல் அஸ்வின் வரை… இனி ஆண்டுக்கு ரூ.3.15 கோடி போனஸ் வரும் – பிசிசிஐ புதிய திட்டம்!

India National Cricket Team: இந்தியாவில் இனி டி20 போட்டிகள் குறித்த பேச்சுதான் எங்கும் இருக்கும். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் இனி சில நாள்களுக்கு டி20 போட்டிகள் மீதுதான் கவனம் இருக்கும் எனலாம். ஆம், இந்தியாவில் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் மே மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து, ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. 

டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம்

டி20 தொடர்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி வீரர்களுக்குமே மிகுந்த உற்சாகம் அளிக்கக்கூடியது. காரணம், அது கொடுக்க கூடிய பிரபலம் ஒருபுறம் என்றால், அதன் மூலம் கிடைக்கும் வருவாயே வீரர்களுக்கு முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் தொடங்கி தற்போது பல அணிகளின் வீரர்கள் டி20 தொடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் காரணம், அவர்களின் தேசிய அணிகளுக்காக விளையாடும்போது சொற்ப அளவில்தான் வருவாய் கிடைக்கிறது. 

எனவே, அதனை ஈடுகட்டவே அவர்கள் டி20 போட்டிகளில் கவனம் செலுத்துகின்றனர். இது இந்திய வீரர்களுக்கும் பொருந்தும். இந்திய வீரர்கள் தற்போது டெஸ்ட் போட்டிகள் போன்றவற்றை விட ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்தனர். சமீபத்தில், உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாததால் இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பிசிசிஐ சமீபத்தில் அதன் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கியது.

ஜெய் ஷா அறிவிப்பு

இஷான் கிஷனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக பிசிசிஐ அழைப்பு விடுத்ததாகவும், தான் இன்னும் அதற்கு தயாராகவில்லை என தொடரை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர் புறக்கணித்தது ஒருபுறம் இருக்க அவர் ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்ததே பிசிசிஐயின் நடவடிக்கைக்கு வித்திட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், இதில் முக்கிய பிரச்னையே டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைக்கும் வருவாய்தான் என கூறப்பட்டது. அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும் தொகையை விட ஐபிஎல் தொடரில் அதிகம் பெறலாம் என்பதால் இந்தியர்கள் டி20யில் கவனம் செலுத்துவதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று சில நிமிடங்களிலேயே, டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுக்கான போட்டி தொகை உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். 

அவர் அந்த அறிவிப்பில்,”“எங்கள் மதிப்பிற்குரிய விளையாட்டு வீரர்களுக்கு நிதி வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, சீனியர் ஆடவர் அணிக்கான ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்’ தொடங்கப்பட்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நடப்பு 2022-23 சீசனில் இருந்து தொடங்கும் ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்’, தற்போதுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான போட்டிக் கட்டணமான 15 லட்ச ரூபாய்க்கும் மேல் கூடுதல் வெகுமதியை கொடுக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வளவு போனஸ்?

இத்திட்டம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,”ஒரு வருடத்தில் 9 டெஸ்ட் போட்டிகள் என்றால், 4 போட்டிகளுக்கும் கீழ் (50 சதவீதத்திற்கும் கீழ்) விளையாடிய வீரர்களுக்கு எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்பட மாட்டாது. அதே சமயம், 5, 6 போட்டிகள் (50 சதவீதத்திற்கும் மேல்) விளையாடினால், தலா ஒரு போட்டிக்கு 30 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். இருப்பினும் அவர் 5,6 போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெறாவிட்டாலும் அவருக்கு தலா ஒரு போட்டிக்கு 15 லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

I am pleased to announce the initiation of the ‘Test Cricket Incentive Scheme’ for Senior Men, a step aimed at providing financial growth and stability to our esteemed athletes. Commencing from the 2022-23 season, the ‘Test Cricket Incentive Scheme’ will serve as an additional… pic.twitter.com/Rf86sAnmuk

— Jay Shah (@JayShah) March 9, 2024

அதுமட்டுமின்றி, 7 மற்றும் அதற்கும் மேல் (75% மேல்) விளையாடினால் தலா ஒரு போட்டிக்கு 45 லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என்றும் 7 அல்லது அதற்கும் மேலான போட்டிகளுக்கு பிளேயிங் லெவனில் இல்லாவிட்டாலும் தலா ஒரு போட்டிக்கு 22.5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு சீசனிலேயே அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விராட் கோலி முதல் அஸ்வின் வரை

இதை வைத்து பார்க்கும்போது, விராட் கோலி, பும்ரா, ரோஹித் சர்மா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் இந்தியா 9 போட்டிகளை விளையாடினால் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் இவர்கள் விளையாடிவிடுவார்கள், குறிப்பாக பிளேயிங் லெவனிலும் இருப்பார்கள். இதை வைத்து கணக்கிட்டால் இவர்கள் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கு வாங்கும் 15 லட்ச ரூபாய் உடன் போனஸாக 3.15 கோடி ரூபாயை பெறுவார்கள் எனலாம். தற்போது டெஸ்டில் கால்பதித்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், சுப்மான் கில் போன்ற வீரர்களுக்கும் இது பயனளிக்கும் எனலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.