டெல்லியில் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைதுசெய்த பிறகு, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பெயரும் இதில் அடிபட்டது. அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு டெல்லியில் விசாரணைக்கு கவிதா நேரில் ஆஜரானார்.
இப்படியிருக்க, இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு சம்மன்களை கவிதா புறக்கணித்ததையடுத்து, ஹைதராபாத்திலுள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ரெய்டு நடத்தத் தொடங்கினர். இந்த நிலையில், கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மாலை கைதுசெய்திருக்கின்றனர்.
இது குறித்து கவிதா வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாரத ராஷ்ட்ரிய சமிதியின் மூத்த தலைவர் பிரசாந்த் ரெட்டி, `அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்றிரவு கவிதாவை விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரிப்பார்கள்’ என்று தெரிவித்தார்.
கே.சி.ஆர் மகள் கைதுசெய்யப்பட்ட சம்பவம், தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.