பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் எப்போதும் இல்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தனியார் ஊடகத்துக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது, மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், பிற கட்சிகளுடனான கருத்தொற்றுமை அடிப்படையில் பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி முன்னிறுத்தப்படலாம் என கூறப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. இதுகுறித்து நிதின் கட்கரி கூறியதாவது:

பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் ஒருபோதும் இருந்ததில்லை. இப்போது உள்ள பதவியே எனக்கு திருப்தி அளிக்கிறது. உண்மையில் நான்அரசியல்வாதி அல்ல, அர்ப்பணிப்பு கொண்ட தொண்டன்.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகச்சிறப்பான பணிகளை செய்து வருகிறது. மத்தியில் மோடிதலைமையில் 3-வது முறையாக நாங்கள் ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராமர் கோயில் தொடர்பான கேள்விக்கு, “ராமர் கோயில் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என நினைக்கிறேன். நீண்ட சட்ட போராட்டத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.