மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி ஏற்றிச் சென்று, பெண்ணை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, போர்டேஹி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமையன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இந்த இச்சம்பவம் குறித்து பேசிய துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி (SDOP) ஷாலினி பரஸ்தே, “பாதிக்கப்பட்ட திருமணமான 38 வயது பெண், சனிக்கிழமை மாலை ஒரு விவசாய பண்ணை நிலத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த இருவர் லிஃப்ட் கொடுக்க தாமாக முன்வந்தனர். அந்த இருவரில் ஒருவர் தனக்குத் தெரிந்தவர் என்பதால், அந்தப் பெண்ணும் ஸ்கூட்டரில் ஏறிச்சென்றார். அதையடுத்து, அந்த இருவரும் ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதால், தற்போது பெதுல் மாவட்ட மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர், போலீஸாரும், தாசில்தாரும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதையடுத்து, ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக இந்த வழக்கு போர்டேஹி காவல் நிலையத்துக்கு அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.