பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்களை இலவசமாக எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்குவதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
தரம் 6 இற்கு மேற்பட்ட மாணவிகளுக்காக வழங்கப்படவுள்ள இத்துவாய்கள், எட்டு இலட்சத்திற்கும் அதிகமான மாணவிகளுக்கு கிடைக்கப்பெறவுள்ளன. அதற்கான வவுச்சர்களை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நேற்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், கல்வி விடயங்களில் ஆறாம் ஆண்டிலிருந்து 9ஆம் ஆண்டு வரை விஞ்ஞானமும் சுகாதாரம் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலைக் கட்டமைப்பில் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பாக வயதுக்குப் பொருத்தமான முறையில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்த கல்வி அமைச்சர், உயர்தர வகுப்பு மாணவிகளுக்காக 16+ எனும் மேலதிக வாசிப்புப் புத்தகமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
12-47 வயதுக்குற்பட்ட பெண்களில் அதிகமானவர்கள் சரியான சுகாதார முறைகளைப் பின்பற்றுவதில்லை என்று அறியப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய ஆறாம் தரத்திற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு வவுச்சர் ஊடாக தர உத்தரவாதத்துடனான சுகாதாரத் துவாய்களை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பளிப்பதாகவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சுட்டிக்காட்டினார்.