'மரியான்' மாதிரி இருக்குமா 'ஆடுஜீவிதம்' ?

பிளஸ்ஸி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலா பால் மற்றும் பலர் நடித்துள்ள மலையாளப் படம் ‛தி கோட் லைப் – ஆடுஜீவிதம்'. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக மார்ச் 29ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் கதை, பரத்பாலா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், தனுஷ், பார்வதி மற்றும் பலர் நடிப்பில் 2013ல் வெளிவந்த 'மரியான்' படம் போல இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பேசுகையில், “ஒருத்தர் கேட்டாரு, என்ன 'மரியான்' மாதிரி இருக்குமான்னு கேட்டாரு. 'மரியான்' ஒரு கற்பனைக் கதை, ஆனால், இது ஒரு நிஜக் கதை. 250 முறை அந்த நாவல் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அவ்வளவு முறை நடந்திருக்குன்னா, அந்த நாவல்ல ஏதோ ஒண்ணு நிச்சயம் இருந்திருக்கணும். அதை நீங்களே கண்டுபிடிச்சி சொல்லுங்க,” என்றார்.

'ஆடுஜீவிதம்' படம் 'கோட் டேஸ்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ஒரு படம். பென்யமின் என்பவர் எழுதிய இந்த நாவல் 2008ல் வெளிவந்து, மலையாளத்தில் அதிகம் விற்பனையான ஒரு நாவல். கேரளாவிலிருந்து சவூதி அரேபியா சென்ற ஒரு மலையாளத் தொழிலாளி, அவருக்கு விருப்பமில்லாத ஆடு மேய்க்கும் வேலையில் தள்ளப்படுகிறார். அது பற்றிய நாவல்தான் 'கோட் டேஸ்'.

'மரியான்' படம் போல 'ஆடுஜீவிதம்' இருக்கிறதா, அல்லது 'மரியான்' படத்தின் கதையும் 'கோட் டேஸ்' நாவலில் இருந்து தழுவி எடுக்கப்பட்டதா என்பது 'ஆடுஜீவிதம்' வந்த பின் தெரியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.