புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கேஜ்ரிவாலின் வீட்டை சுற்றிலும் இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கையின்போது எம்எல்ஏ ராக்கி பிர்லா உட்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கேஜ்ரிவாலின் வீட்டுக்கு வெளியே கூடி கோஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை கைது செய்த போலீஸார் சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்தனர்.
கேஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றி 2அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அசம்பாவிதங்களை தடுக்க டிரோன்கள் மூலம்கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதேபோன்று,அக்பர் சாலை மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் உள்ளஅமலாக்கத் துறை அலுவலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது. மேலும், முதல்வரின்அதிகாரப் பூர்வ இல்லத்துக்கு செல்லும் பாதைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
மூத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் உரையாடல்களை ஏஜென்சிகள் கண்காணித்து வருகின்றன. மாவட்ட காவல் துறை தலைவர்கள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கலவரம் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பகுதிகளில் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தால் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க போக்குவரத்து போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், “சட்டம்ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும்ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு மூத்த அதிகாரிகளிடமிருந்து வாய்மொழி உத்தரவுகளை பெற்றுள்ளோம். சிறியதொரு அசம் பாவித நிகழ்வுகளும் ஏற்படக்கூடாது என்பதில் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.