புதுடெல்லி: கடந்த 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை வருமான வரித் துறை அதிகாரிகள் மறுமதிப்பீடு செய்வதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை கடந்த 20-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பைஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா, புருஷைந்திர குமார் கவுரவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, காங்கிரஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, மறு மதிப்பீடு நடவடிக்கை வரம்புகளை மீறியது என்றும், வருமான வரித் துறைஅதிகபட்சம் கடைசி 6 மதிப்பீட்டுஆண்டுகளை மட்டும் விசாரிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதற்கு வருமான வரித்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், “வருமான வரித்துறை எந்தவொருசட்டரீதியான விஷயங்களையும் மீறவில்லை. மீட்கப்பட்ட ஆவணங்களின்படி, காங்கிரஸ் கட்சியின் ரூ.520 கோடிக்கு மேல் வருமானம் கணக்கில் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக, 2018-19 மதிப்பீட்டுஆண்டில் காங்கிரஸ் கட்சியின் வருவாயானது ரூ.199 கோடிக்குமேல் இருந்த நிலையில், ரூ.100 கோடி வரி செலுத்தக்கோரி காங்கிரஸுக்கு வருமான வரித்துறைநோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனிடையே கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது. இதற்கு வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இடைக்கால தடைவிதித்தது.
இந்நிலையில், வருமான வரித்துறையின் மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு தடைவிதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து இருப்பது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.