பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் சவுதி அரேபியா

ரியாத்,

அரேபிய தீபகற்பத்தின் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா, கடுமையான சமூக மற்றும் மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறது. இருப்பினும், சமீப காலமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தலைமையில் பல மாறுதல்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்த மாற்றம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி, அவர்கள் வாகனம் ஓட்டவும், கலப்பு-பாலின நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் மற்றும் ஆண் பாதுகாவலர் இல்லாமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது. இதன்படி 2024 பிரபஞ்ச அழகி போட்டியில் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த 27 வயதான மாடல் அழகி ரூமி அல்காதானி பங்கேற்க உள்ளார்.

இது குறித்து ரூமி அல்காதானி கூறுகையில், சவுதி அரேபியாவின் உண்மையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் தனது செயல்பாடுகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு ரூமி அல்காதானி மிஸ் சவூதி அரேபியா, மிஸ் மிடில் ஈஸ்ட் (சவூதி அரேபியா), மிஸ் அராப் வேர்ல்ட் பீஸ் 2021 மற்றும் மிஸ் உமன் (சவுதி அரேபியா) ஆகிய பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.