ஆன்லைன் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், சமீப காலமாக ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவதை நம்மால் கண்கூட பார்க்க முடிகிறது. விதவிதமாக மோசடி செய்யும் யுத்திகளை கையாண்டு, பல முறைகளில் மக்களிடமிருந்து நூதனமாக பணத்தை திருடுகிறார்கள்.
‘ஆன்லைன் மோசடிகள் நடப்பது என்ன புதுசா, நாம தான் பத்திரமா இருந்துக்கணும்’ என்று சொல்பவர்கள்கூட ஆஃபர் என்று வந்தவுடன் ‘ஆ…’ என்று வாயைப் பிளந்துகொண்டு அதன் பின்னே ஓடி விடுகிறார்கள். கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 11.3 லட்சம் நிதி இணைய மோசடி வழக்குகள் பதிவாகி இருப்பதாக அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது.
நம்மில் பெரும்பாலானவர்கள் ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என அன்றாட தேவை முதல் அனைத்தையும் இணையதளம் மூலம் மேற்கொள்கிறோம். இதை அறிந்து, நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மூலம்கூட மோசடிகளின் எண்ணிக்கை தற்போது பெருக ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் முகநூலில், நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் ஆஃபரில் பாதி விலைக்கு விற்பதாக வந்த பதிவை பார்த்து ஒரு பெண் ஆர்டர் செய்துள்ளார். 2,435 ரூபாய் கட்டணமாக வந்துள்ளது. இதை தனக்கு ஆன்லைன் மூலம் செலுத்தி விடுமாறு அந்த பேஜ் உரிமையாளர் கூறியிருக்கிறார். தனக்கு ஆன்லைன் பரிவர்த்தனை பற்றி தெரியாது என்று இப்பெண்மணி கூறியதால் உரிமையாளரே முன்வந்து இவருக்கு ஆன்லைன் பரிவர்த்தனை பற்றி கற்றுக் கொடுத்து தனக்கு பணம் அனுப்புமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.
பலமுறை முயற்சி செய்த பின்பும் பேமெண்ட் வந்து சேரவில்லை என்று உரிமையாளர் சொல்ல, இவர் மீண்டும் மீண்டும் முயற்சித்திருக்கிறார். அதிர்ச்சிமூட்டும் வகையில் தனது வங்கி கணக்கில் இருந்த ஒரு பெரிய தொகை எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது போலவே ஆஃபரை காட்டி பெண்களை குறி வைத்து பல மோசடிகள் சமூக வலைத்தளங்களின் மூலம் அரங்கேரி வருகிறது. இதனால் லட்சங்களை தொலைத்தவர்களும் இருக்கிறார்கள்.
போலியான வெப்சைட்…
போலியான வெப்சைட் ஒன்றை தயாரித்து, அதை ஷாப்பிங் சைட் என சமூக வலைத்தளங்களில் ப்ரமோஷன் செய்து வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் நல்ல பொருட்களை தருகிறோம் என்று மார்க்கெட்டிங் செய்கிறார்கள். இதை நம்பி பலரும் பணத்தை இழந்து நிற்கிறார்கள். ஓ.டி.பி மூலம் பண மோசடிகள் நடப்பது ஒரு புறம் இருந்தாலும், இது மாதிரியான சமூக வலைத்தளங்கள் மற்றும் போலி வெப்சைட்டுகளின் மூலம் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது.
எந்த ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் ஆன்லைன் ஷாப்பிங் பொறுத்தவரை, அது நம்பகமான வெப்சைட்டா என்று சரி பார்த்த பிறகு பேமென்ட் செய்ய வேண்டும். முடிந்த வரையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. ஆஃபர் என்றவுடன் குதூகலிக்காமல், ஒரு தரமான பொருளை இந்த விலையில் தருவார்களா என்பதை உறுதி செய்த பின்பு ஷாப்பிங் செய்வது புத்திசாலித்தனம். குறிப்பாக பெண்களை மையப்படுத்தியே இந்த ஷாப்பிங் மோசடிகள் அரங்கேறி வருகிறது.
அதனால ஆன்லைன் ஷாப்பிங் பண்ணும்போது பெண்களே உஷாராக இருந்துகோங்க.