அரைசதம் அடித்த விராட் கோலி…கம்பீர் செய்த அன்பான செயல்…ரசிகர்கள் மகிழ்ச்சி

பெங்களூரு,

17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி , முதலில் பேட்டிங் செய்த.பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது. பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 83ரன்கள் (4 பவுண்டரி , 4 சிக்சர்) எடுத்தார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறிய கொல்கத்தா வெறும் 16.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்தார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் பெங்களூரு பேட்டிங் செய்தபோது 16-வது ஓவர் முடிவில் தண்ணீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது களத்திற்குள் வந்த கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் அங்கிருந்த விராட் கோலி அருகே சென்று தாமாக பேசினார். அவரது தோள் மீது விராட் கோலியும் கை போட்டு பேசியது மொத்த ரசிகர்களையும் ஆரவாரப்படுத்தியது. அப்போது அரை சதமடித்ததற்காக விராட் கோலிக்கு சிரித்த முகத்துடன் கவுதம் கம்பீர் வாழ்த்து தெரிவித்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

ஏனெனில் கடந்த வருடம் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் அவர்கள் சண்டையிட்டது மிகப்பெரிய சர்ச்சையாக அமைந்தது. ஆனால் அந்த பழைய பகையை மறந்த கம்பீர் இன்று விராட் கோலியை பாராட்டியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் அமைந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.