சென்னை ஆழ்வார்பேட்டையில் பரிதாபம்: கேளிக்கை விடுதி கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் மதுபான கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. நேற்று இரவு இந்த விடுதியில் ஏராளமானோர் மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இடிபாடுகளை அகற்றும் வல்லுநர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு படையினருடன் இணைந்து அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கூரை இடிந்து விழுந்தபோது, அப்பகுதியில் 30 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 3 பேர், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

தகவல் கிடைத்து, தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த்சின்ஹா, சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜ் ஆகியோரும் வந்து, விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

முதல் தளத்தின் கூரை இடிந்த அதிர்வில் தரை தளத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு இருந்த சிலரும்காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையே, விபத்தில் சிக்கி உயிரிழந்தது திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன்ராஜ் (48), மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (22), லல்லி (24) என்ற தொழிலாளர்கள் என போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.