இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன்… ஈரான் பகிரங்க எச்சரிக்கை

தெஹ்ரான்,

சிரியாவில் ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் அன்டானியோ கட்டிரெஸ், இதுபோன்று படைகளை குவிப்பதற்கு எதிராக, சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விட்டுள்ளது. அந்த அளவுக்கு பணமோ, நேரமோ நமக்கு இல்லை என்ற வகையில் கூறிய அவர், இன்னும் அதிகளவிலான போர் ஏற்பட்டால், அதனால் விளைவுகள் மோசம் அடையும் என்றும் கூறியுள்ளார்.

ஈரான் தாக்குதல் நடத்தியதும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தன்னுடைய மந்திரிசபையுடன் போர் பற்றி கடந்த ஞாயிற்று கிழமை ஆலோசனை நடத்தினார். ஆனால், ஈரான் தாக்குதலுக்கு எப்போது? அல்லது எப்படி? பதிலடி கொடுப்பது என்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகம் தெரிவிக்கின்றது.

இஸ்ரேலில் இருந்து வெளிவரும் ஹேயோம் பத்திரிகையில், ஈரானில் பதற்ற நிலை காணப்படுகிறது. அது அரசாட்சியை பலவீனப்படுத்தி உள்ளது. அதனால், பதிலடி கொடுக்க இஸ்ரேல் தலைவர்கள் அவசரப்பட வேண்டியதில்லை என தெரிவித்து உள்ளது.

ஈரான் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறும்போது, மத்திய கிழக்கு பகுதியில் வன்முறையை தவிர்க்க வேண்டிய அனைத்து உதவிகளையும் எங்களுடைய அரசு செய்யும் என கூறினார்.

ஈரான் தாக்குதலை தகர்த்து, முறியடித்த நிலையில், மோதலுக்கான தீவிரம் குறைக்கப்பட வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேலின் கூட்டணி நாடான அமெரிக்காவும், எச்சரிக்கையுடனும், அமைதியாகவும் இருக்கும்படி இஸ்ரேலை வலியுறுத்தி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற இடங்களில் விமான நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. எனினும், இந்த மோதலால், பங்கு சந்தைகள் நேற்று சரிவை சந்தித்திருந்தது.

இந்த சூழலில், இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து கொள்ள வேண்டும் என்று ஈரான் எச்சரித்து உள்ளது. இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் எங்களுடைய தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியே நாங்கள் தொடுத்த தாக்குதல் ஆகும் என ஈரான் தெரிவித்தது.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி கூறும்போது, விளைவுகளை பற்றி எண்ணாத, பொறுப்பற்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஒரு வலிமையான பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனானி கூறும்போது, ஈரான் சமீப மாதங்களாக கட்டுப்பாட்டுடன் உள்ளது. இதனை மேற்கத்திய நாடுகள் பாராட்ட வேண்டும் என்று கூறினார்.

2 ராணுவ அதிகாரிகள் உள்பட புரட்சிப்படையினர் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின், தற்காப்புக்கான நடவடிக்கையாகவே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என ஈரான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.