ஜிகே மணியிடம் பதவியை பிடுங்கியவர் அன்புமணி – எடப்பாடி பழனிசாமி வீசிய புதுகுண்டு

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் ஆதரித்து மேச்சேரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது,” தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி சந்திக்கிறோம். அதிமுக கூட்டணியில் பாமக இருந்தபோது இரண்டாவது இடம் வேண்டும் என்று கேட்டனர். இப்போது ஐந்தாவது இடத்திற்கு சென்று விட்டனர். அதிமுக கூட்டணியில் பாமக இருந்த போது மூன்றாவது இடத்தில் பாஜக இருந்தது. இப்போது பாமகவின் நிலைமை எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வேஸ்ட் என்று அன்புமணி பேசுகிறார். அதிமுக ஓட்டு போட்டதால் தான் இப்போது அவர் எம்பியாக இருக்கிறார். அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் நன்மை தான் கிடைக்கும். மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது மேச்சேரிக்கு ஏதேனும் ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்தாரா?. பாமக அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி எதுவுமே செய்யவில்லை, தங்களது கோரிக்கை நிராகரித்துவிட்டார் என்று கூறுகிறார். சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டுமென்று அரசாணையிட்டது எடப்பாடி பழனிசாமி. 2020 டிசம்பர் மாதமே உத்தரவு போட்டு நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டோம். அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தோம். 

ஜூன் மாதம் அது கால நீடிப்பு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆறு மாத காலமும் இதை நீடிக்க வேண்டும். 2021 ஜூன் மாதம் இது நீடிக்கவில்லை. அதனால் காலாவதியாகிவிட்டது. 2021 இல் அதிமுக ஆட்சி தொடர்ந்து இருந்தால் இது நடைமுறைப்படுத்தி முடித்திருப்போம். ஆனால் நீங்கள் அதிகாரத்துக்கு வருவதற்காகவே எங்களுக்கு குறை சொல்லி பேசுகிறீர்கள். 21.12.2020ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. அதை ஆன்லைனில் எடுத்து பார்த்துக் கொள்ளலாம். அதிமுக மட்டும் இல்லை என்றால் கிராம மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பார்கள். ஏழை எளிய மக்கள் கிராம மக்கள் மேம்பட வேண்டும் என்பதற்காகவே அதிமுக தோற்றுவிக்கப்பட்டது. சாலை வசதி, கல்வி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தது அதிமுக அரசுதான்,

கடலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அன்புமணி பேசும்போது கடலூர் தொகுதியில் வசிப்பவருக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கிறார். நாங்களும் அதையே கேட்கிறோம், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் வேட்பாளர் அசோகனுக்கு வாக்களியுங்கள். அன்புமணியும் நீட் தேர்வு நீட் தேர்வு என்று பேசுகிறார். நீட் தேர்வை அமல்படுத்தியது பாஜக. அந்த கட்சியுடன் தான் கூட்டணி சேர்ந்துள்ளனர். நேரத்துக்கு நேரம் வேறுபட்ட கருத்தை மாறி மாறி பேசுகிறார். கட்சித் தலைவராக இருந்த ஜிகே.மணியின் பதவியும் அவர் பறித்துகொண்டார்.

திமுக இதுவரை செய்ததையும் சொல்லவில்லை, செய்யப் போறதையும் சொல்லவில்லை. அதிமுக கடந்த 10 ஆண்டுகள் செய்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கிறோம். திமுகவால் அப்படி சொல்லி வாக்கு கேட்க முடியுமா?, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் என்ன செய்தார்கள்?, ஸ்டாலினை பொறுத்த வரைக்கும் மாநிலத்திலும் பதவியில் இருக்க வேண்டும், மத்தியிலும் பதவியில் இருக்க வேண்டும். போதை பொருள் விற்பனையில் திமுக நம்பர் ஒன் ஆட்சி. அதிகமாக கடன் வாங்கியதிலும் முதல் மாநிலம் தமிழகம்.

2021 சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான மகளிர்க்கு உரிமை தொகை வழங்குவது நிறைவேற்ற வில்லை. அதிமுக வலியுறுத்தியதால் வேறு வழி இல்லாமல் 27 மாதங்கள் கழித்து ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். 2 கோடி 15 லட்சம் பேருக்கு வழங்குவதாக குறிப்பிட்டு 1 கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கிறார். ஆனால் 70 லட்சம் பேருக்கு தான் வழங்கப்படுகிறது.

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது 2016ல் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடன் ரத்து செய்தோம். ஐந்தாண்டுகளில் இரண்டு முறை கடன் தள்ளுபடி செய்தது அதிமுக அரசுதான். அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடனும் உடனுக்குடன் வழங்கப்பட்டது. கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு குறைவாக நகை வைத்திருப்பவர்கள் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தனர். தமிழக முழுவதும் 42 லட்சம் பேர் நகைகளை அடகு வைத்தனர். பிரச்சார கூட்டத்தின் போது கூட மகளிரிடம் நகைகளை அடகு வைக்க உதயநிதி ஸ்டாலின் தூண்டினார்.

அவரை நம்பி ஏராளமான மகளிர் நகைகளை அடகு வைத்தனர், தகுதியானவருக்கு தான் நகை கடன் தள்ளுபடி என 13 லட்சம் பேருக்கு தான் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது அவர்கள் வட்டி அபராத வட்டி செலுத்தும் நிலைக்கு வந்து விட்டனர். திமுகவினர் அப்போது தகுதியானவருக்கு தான் நகை கடன் தள்ளுபடி என்று அறிவிப்பை கொடுத்திருந்தால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். இதுபோன்று மக்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு இந்த தேர்தலில் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.