அனிமல் படத்தின் வெற்றிக்கு வித்யாபாலன் சொல்லும் காரணம்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி என்கிற படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய சந்தீப் ரெட்டி வங்கா பாலிவுட்டில் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்கிற படத்தை இயக்கினார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆயிரம் கோடி வசூலை நெருங்கியது. ஏற்கனவே பாலிவுட்டில் இரண்டு படங்கள் சரியாக போகாத நிலையில் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இந்த படம் கை கொடுத்தது. அது மட்டுமல்ல வில்லனாக நடித்த பாபி தியோலும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

ஆனால் படம் வெளியான நாளிலிருந்து, இது பெண்களை ரொம்பவும் கீழ்த்தரமாக சித்தரிக்கிறது என்கிற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தன. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்தப்படம் ஏன் வெற்றி பெற்றது என்பது குறித்து சமீபத்தில் தன்னுடைய பார்வையை விவரித்துள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “அனிமல் திரைப்படம் வெற்றிக்கு காரணம் அது நம்பிக்கையின் வெளிப்பாடாக உருவாகி இருந்தது தான். ஒரு படத்தின் வெற்றிக்கு கதை தான் ராஜா என்று நீண்ட காலமாக சொல்லி வருகிறோம். அதேசமயம் ஒரு கதையை எந்தவித சமரசமும் இன்றி யாரையும் சமாதானப்படுத்தாமல் யாரிடமும் மன்னிப்பு கோர முடியாமல் துணிச்சலாக சொல்ல முடிவதும் அந்தப் படத்தின் வெற்றியை உறுதி செய்யும். அதற்கு அனிமல் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

இந்த படம் குறித்து இயக்குனரோ படக்குழுவினரோ யாருமே எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு இரண்டாவது எண்ணமே இல்லை. இந்த படம் பெண்களை தவறாக சித்தரிக்கிறது என்று சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும் கூட, அதையெல்லாம் ரசிகர்கள் புறம் தள்ளி விட்டார்கள். மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ இந்த படம் தங்களை அழகாக பொழுது போக்க செய்தது என்பது அவர்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.